லசந்த விக்கிரமதுங்கவின் 14வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு: நினைவு தினம் அனுசரிப்பு... சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , மட்டு ஊடக அமைய உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.