தஞ்சை ரயில் நிலையத்தில் தலையாட்டி பொம்மை விற்பனை அரங்கு தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங்களில் “ஒரு ரயில் நிலையம் - ஒரு உற்பத்தி பொருள்” என்ற தலைப்பின்கீழ் கடைகள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள “தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்” விற்பனை செய்ய, ரயில் நிலையத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை அரங்கில் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஊராட்சியினை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நடமாடும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள் உள்ளிட்ட பல வகையான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் கடந்த மாதம் மன் கீ பாத் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் முக்கியத்துவம் குறித்து பேசிய பின்னர், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பலரும் வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் விற்பனையும் அதிகரித்துள்ளது என்றார்.

மகளிர் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, தெற்கு ரயில்வே கோட்ட உதவி வணிக மேலாளர் சந்திரசேகர், தஞ்சை ரயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் மோகன், சாமிநாதன், சிவா, சரவண பாண்டியன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.