கொரோனா ... சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வருவது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் .. நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பவரல் உயர்ந்துள்ளது.

இதே போன்று தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் உயர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 400-ஐ நெருங்கியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும். மாஸ்க் அணிவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும். மருத்துவ குழு அமைத்து வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.