மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யக் கோரி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினார். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

கடைசியில் ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தில் பலரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். புகார் கூறிய ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் உள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணைத்திற்கு 8-வது முறையாக கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும்,வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யக்கோரியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.