சென்னை: லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .... தமிழ் மாதம் ஐப்பசி பிறந்தாலே அடைமழை காலம் தான் என்ற சொலவடைக்கு தகுந்தாற் போல் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ஆம் தேதி உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அக்டோபர் 24ம் தேதியான தீபாவளி அன்று வங்க கடலில் புயலாக உருவாக உள்ளது.
மேலும், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து இதைத்தவிர வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டி, சாத்தூர் பகுதிகளில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. இதையடுத்து தொடர் கனமழை காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.