வியாபாரிகள் அனைவருக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் உதவி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியில் மட்டும் 33 ஆயிரம் பணியாளர்கள் கொரோனா தடுப்பு மற்றும் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் தினந்தோறும் 400 இடங்களிலும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி, நகர்ப்புறங்களில் வாழும் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1,000 வீதம், ரூ.1,058 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வியாபாரிகள் அனைவருக்கும் முத்ரா திட்டத்தில் கடன் பெற்று வழங்கப்படுகிறது. நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கவும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு சுழல் நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வாழ்வாதாரம் இழந்த நகர்ப்புற இளைஞர்களுக்கு உடனடியாக தொழில் தொடங்கிட கடனுதவி பெறவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.