தேஜஸ் ரயிலால் ஏற்பட்ட நஷ்டம்... ரயில்வே நிர்வாகம் தெரிவித்த தகவல்

சென்னை: தேஜஸ் ரயிலால் நஷ்டம்... சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் மூலம் ரயில்வே துறைக்கு எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.


சென்னை - மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் விரைவாக மதுரையை சென்றடைந்து விடுகிறது.

அதேபோல, மதுரையில் இருந்து புறப்படும் தேஜஸ் ரயில் 6 மணிநேரத்துக்குள்ளாகவே சென்னையை வந்தடைந்து விடுகிறது. இந்நிலையில் இந்த தேஜஸ் ரயிலால் அரசுக்கு கிடைக்கும் வருமானம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள பதிலில், தேஜஸ் ரயிலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கைகள் ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.