இலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்

பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் இலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றார். சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களனி ரஜமஹா விகாரையில் மத சம்பிரதாய அனுஷ்டானங்களை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். மேலும் நான்காவது பிரதமராக தெரிவாகவுள்ள மஹிந்தவுக்கு ஏனைய நாடுகள் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

19 வது திருத்த சட்டத்திற்கு ஏற்ப 30 அமைச்சர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்பதனால் மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் புதிய அமைச்சரவையை 25 முதல் 28 வரை மட்டுப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர் என பொதுஜன பெரமுனவின் மூத்த வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டால் ஒரு அமைச்சருக்கு கீழ் பல அமைச்சரவை பதவிகள் வழங்க வாய்ப்புள்ளது.

அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சையும் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என அக்கட்சியின் மூத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.