உத்தர பிரதேசத்தில் 5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. சமீபத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் இதற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றன. தொடர் போராட்டம் காரணமாக ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவத்திற்கு பின் அம்மாநிலத்தில், பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹர்டோய் மாவட்டத்தில் 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. ஹர்டோய் மாவட்டம் சாண்டிலா நகரில் 5 வயது குழந்தை டியூசன் படிக்க சென்ற இடத்தில், டியூசன் டீச்சரின் தம்பி, அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்பி அனுராக் வாட்ஸ் தெரிவித்தார். அடுத்தடுத்த இது போன்ற சம்பவங்கள் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.