நண்பரின் பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற தமிழர் கைது

நண்பரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு செல்ல முயன்ற தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர் துரைகந்தன் முருகன் என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு வயது 41. இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் வந்தார். வழக்கமான விசாரணைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டையும், பயண அனுமதி அட்டையையும் அதிகாரிகளிடம் அளித்தார்.

ஆனால், அவரது உடைமைகளை பரிசோதித்தபோது, முருகன் பெயருக்குரிய ஆவணங்கள் இருந்தன. உடற்கூறு பரிசோதனையின்போது, அவர் பெயரில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காட்டியது.

இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, தன் பெயர் முருகன் என்றும், உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக, நண்பரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, நியூ ஜெர்சிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார்.