மலைப்பகுதிகளில் பலத்த மழை; அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு மற்றும் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக, மணிமுத்தாறு அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குற்றாலம் மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுந்ததால், அங்குசுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 1,132 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் மணிமுத்தாறு, மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி மற்றும் தோட்ட பகுதிகளில் நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. மாலை 4.00 மணி நிலவரப்படி, மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2,959 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் ஒரே நாளில் சுமார் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து 107.40 அடியை எட்டியது.