14 நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்... பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழகத்தில் தொடங்க வருமாறு பல்வேறு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானிலும், ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும் அமைகின்றன. இதேபோல் அப்போலோ டயர்ஸ் ஓரகடத்திலும் மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன.

10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் இந்த நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.