அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஐதராபாத் மாணவி: தூதரகம் மருத்துவ உதவி

நியூயார்க்: இந்திய தூதரகம் ஒப்புதல்... அமெரிக்காவில் மனநலம் பாதித்து சுற்றி திரியும் ஐதராபாத் மாணவியை இந்தியா அழைத்து வர இந்திய தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மவுலாலி பகுதியை சேர்ந்த சயிதா ஹவாஜ் ஃபாத்திமாவின் மகள் சயிதா லுலு மின்ஹாஜ் சைதி. இவர் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் உள்ள ட்ரையன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ் உயர் கல்வி படிப்பதற்காக சென்றார்.

இதனிடையே சயிதா லுலு மின்ஹாஜ் சைதியின் உடைமைகள் திருடப்பட்டு, சாப்பிட கூட பணமின்றி மனநலம் பாதித்து சிகாகோ சாலைகளில் சுற்றி திரிவதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்தது.

இதை கேட்டு வேதனையடைந்த சயிதா ஹவாஜ் ஃபாத்திமா தன் மகளை அமெரிக்காவில் இருந்து இந்தியா அழைத்து வர உதவும்படி தெலங்கானா முதல்வருக்கும், ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சிகாகோவில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் ஐதராபாத் மாணவிக்கு மருத்துவ உதவிகளை அளித்துள்ளனர். துணைத்தூதரக அதிகாரிகள் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐதராபாத் மாணவியை கண்டறிந்து மருத்துவ உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சி. அவர் தற்போது உடல்நலத்துடன் இருக்கிறார்.

தன் தாயை தொடர்பு கொண்டு பேசினார். அவர் இந்தியா செல்ல தேவையான அனைத்து உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.