திருவேற்காடு பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

சென்னை: திருவேற்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை திருவேற்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட அரவிந்த்நகர், ஏழுமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

அப்பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து, மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முழங்கால் அளவு தண்ணீரில் அவர், வீடு வீடாகச் சென்று மழை குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் மழைநீர் தேங்குவதற்கான காரணம் குறித்தும், அதை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், மழைநீர் விரைவில் அகற்றப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.