பெய்ரூட் துறைமுக வெடி விபத்து காரணமாக நீதித்துறை மந்திரி விலகல்

லெபனானின் துறைமுக நகரும், தலைநகருமான பெய்ரூட்டில் கடந்த 4-ந்தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அருகில் உள்ள சேமிப்பு குடோனில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் குடோன் அமைந்திருந்த கட்டடம் மற்றும் அதன் அருகில் அமைந்திருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த குண்டுவெடிப்பின் 15 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் உணரப்பட்டது. அருகிலிருந்த கட்டடங்கள், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் வெடித்து சிதறின. 135-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்தனர். மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அமோனியம் நைட்ரேட் என்ற வெடிமருந்து வெடித்ததே இந்த சம்பவத்திற்கான காரணமாக லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியதையடுத்து இந்த விபத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடங்கிய நிலையில் தகவல் தொடர்பு மந்திரி மனால் அப்தெல் சமாத், சுற்றுச்சூழல் மந்திரி டமியானோஸ் கட்டார் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகியுள்ளனர். மேலும், 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் முன் போராட்டக்காரர்கள் கூடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். தற்போது நீதித்துறை மந்திரி மரி கிளாட் நஜ்ம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் அங்கு மூன்று மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.