போக்குவரத்து துறை அமைச்சர் பேருந்து கட்டணம் குறித்து விளக்கம்

சென்னை:பேருந்து கட்டணம் குறித்த விளக்கம் .... தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு தலைமை ஏற்ற திமுக அரசு மாநகர அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அரசின் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இதன் மூலம் இதுவரை செலவழித்து வந்த பேருந்து கட்டணத்தொகை தற்போது சேமிக்கப்பட்டு வருவதாகவும் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

மற்றொருபுறம் இந்த இலவச பயணத்திட்டதால் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்தது. அதனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இதனை அடுத்து இதை ஈடு செய்ய பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தப் போவதாக பல தகவல்கள் பரவி வந்தது.

இதையடுத்து இது பற்றி பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை. தற்போது போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.