முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

தகவல் அறிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் புறப்பட்டுச் சென்று தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.