உத்தரகாண்ட்டில் ஆற்றைக் கடந்தபோது தவறி விழுந்த எம்எல்ஏ மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆர், குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் இந்த கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் பிதோராகர் மாவட்டம் தார்சுலா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் உள்ள சிறிய ஆற்றை கடந்து சென்றுள்ளார்.

அந்த ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அந்த ஆற்றில் இறங்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென எம்எல்ஏ ஹரிஷ் தாமி நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது.

அப்போது அவருடன் இருந்த ஆதரவாளர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர். பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைசேர்க்கப்பட்டார். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.