நிவர் புயல் காரணமாக 1 லட்சத்துக்கு அதிகமான வாழை மரங்கள் சேதம்

நிவர் புயல் காரணமாக கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு, அனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். மேலும் தென்னை மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.

சுமார் 1 லட்சத்துக்கும் மேலான வாழை மரங்கள் பல்வேறு கிராமங்களில் சேதமடைந்து விட்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் நேற்று பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. புயல் காற்று வீசியதில் குப்பநத்தம், கிளையூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் அடியோடு சாய்ந்தது.

அதேபோல் செங்கத்தில் இருந்து பரமனந்தல் செல்லும் சாலையில் காந்திநகர் அருகே சாலை நடுவே புளியமரம் ஒன்று சாய்ந்தது. இதனை அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் வெட்டி அகற்றினர். மேலும் புளியமரம் விழுந்ததில் 3 மின்கம்பங்கள், ஒரு டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. பகல் நேரத்தில் புயலின் தாக்கம் காரணமாக விட்டுவிட்டு செங்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.