கடந்த 2006-ல் ஒரு பயணி தவறவிட்ட பர்சை கண்டுபிடித்த மும்பை போலீசார்

மும்பை பன்வேல் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் பதால்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய போது, ஹேமந்த் பதால்கர் ரெயில் நிலையத்தில் தன் பர்சைத் தவறவிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இருப்பினும் பர்ஸ் குறித்து எந்தத் தகவலும் ஹேமந்துக்கு 2020 மார்ச் மாதம் வரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரெயில்வே போலீஸ் அதிகாரி ஹேமந்தை தொலைபேசியில் அழைத்து, கடந்த 2006-ம் ஆண்டு நீங்கள் ரயில் நிலையத்தில் தொலைத்த உங்கள் பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ஹேமந்த் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.

ஊரடங்கு காரணமாக ரெயில்வே போலீசாரை ஹேமந்த்தால் சந்திக்க முடியவில்லை. மும்பையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின், ரெயில்வே போலீசாரைச் சந்தித்க ஹேமந்த் சென்றபோது அவரிடம் 14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பர்ஸ், அதிலிருந்து 300 ரூபாயுடன் போலீசார் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஹேமந்த் பதால்கர் கூறுகையில், 2006-ல் பர்சைத் தவறவிட்டேன். பர்சில் சில கார்டுகள், ரூ.900 பணம் இருந்தது.நான் பர்சைத் தவறவிட்டபோது அதில் பழைய 500 ரூபாய் நோட்டு உள்பட ரூ.900 இருந்தது. 2016-ம் ஆண்டு 500 ரூபாய் செல்லாது என, அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணத்தை போலீசார் என்னிடம் தரவில்லை.அதற்குப் பதிலாக ரூ.300 மட்டும் கொடுத்தனர். 100 ரூபாயை தபால் செலவுக்காக எடுத்துக்கொண்டனர். செல்லாமல் போன 500 ரூபாயை மாற்றிக் கொடுக்கிறோம். அதையும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.