28 நாளாக இருந்த உண்ணாவிரதத்தை விலக்கி கொண்டார் முருகன்

உண்ணாவிரதம் விலக்கி கொள்ளப்பட்டது... வேலூர் சிறையில் முருகன், 28 நாளாக இருந்த உண்ணாவிரதத்தை, நேற்று, 'வாபஸ்' பெற்றார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால், உறவினர்களை சந்திக்கத்தடை, நளினி - முருகன் சந்திப்புக்கு தடை மற்றும் சிறை வளாகத்தில் ஜீவசமாதி அடைய அனுமதிகோரி, கடந்த, 1 முதல் முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று, 28வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சிறைத்துறை அதிகாரிகள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முருகனின் கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சிறையிலுள்ள கோவில்களுக்கு சென்று, சுவாமி கும்பிட மட்டும் அனுமதிப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனால் அவர், நேற்று உண்ணாவிரதத்தை 'வாபஸ்' பெற்றார். அதிகாரிகள், அவருக்கு பழரசம் கொடுத்தனர். இத்தகவலை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.