நியூசிலாந்தில் மேலும் 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தாக்குதல் தொடங்கி உள்ளது. 102 நாட்களுக்கு பின் அங்கு கொரோனா வைரஸ் மீண்டும் பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்துவிட்டதால் அங்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலால், அங்கு நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலை அக்டோபர் மாதம் 17-ந் தேதிக்கு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிரடியாக ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் நேற்று மேலும் 13 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1,293 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.