அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்த அகவிலைப்படி உயர்வு

சென்னை: அகவிலைப்படி உயர்வு... அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளதை அடுத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34% என இருந்த அகவிலைப்படி இன்று முதல் அதாவது ஜனவரி 1 முதல் 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும்.