கார் விபத்தில் புதுமண தம்பதியினர் பலி; உறவினர்கள் சோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). இவரது மனைவி மகாலட்சுமி (21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. சந்தோஷ் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்துள்ளார். இதனால் திருமணமானதும் புதுமண தம்பதியினர் அலங்காநல்லூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் போச்சம்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன்- மனைவி இருவரும் நேற்றிரவு காரில் அலங்காநல்லூரில் இருந்து புறப்பட்டனர். காரை சந்தோஷ் ஓட்டினார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் கரூர் மாவட்டம் தளவாப்பாளையம் கரூர்- சேலம் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே செல்லும் போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் சாலையோரம் உள்ள அறிவிப்பு பலகை தூணில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த சந்தோஷ், மகாலட்சுமி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இருவரும் உயிரிழந்தனர்.

விபத்து நிகழ்ந்தது எப்படி என்று தெரியவில்லை. சந்தோஷ் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமண தம்பதியினர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.