தலைநகர் டெல்லியிலும் குரங்கு அம்மை நுழைந்தது

புதுடெல்லி: உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும், அதன் அச்சுறுத்தலும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் இப்போது குரங்கு அம்மை புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா என பரவி இப்போது ஆசியாவிலும் கால் பதித்து வருகிறது.

அதன்படி இந்நோய் இந்தியாவிலும், தாய்லாந்திலும் பரவி உள்ளது. உலகளவில் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கேரளாவில் 3 பேருக்கு இந்த நோய் பரவி உள்ளது. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

இந்நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்ள்ளது. டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ள நபர் 34 வயது ஆண் ஆவார். மேற்கு டெல்லியைச் சேர்ந்த இவர் வெளிநாடு எதுவும் சென்று வரவில்லை. இருப்பினும் இவர் இமாசலபிரதேசத்தில் மணாலியில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வந்துள்ளார்.

இதற்கு அடுத்து அறிகுறிகள் தென்பட்ட உடனேயே 3 நாட்களுக்கு முன் இவர் டெல்லி மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மேலும் இந்த நோய் பாதித்தவர்களின் சுவாச துளிகள் மூலமாகவும், உடல் ரீதியிலான நேரடி தொடர்புகள் மூலமாகவும் அதிக அளவில் பரவுவது குறிப்பிடத்தக்கது.குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது