தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை..மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில் தமிழகத்தில் நேற்று 2,622 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் 14,504 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் 14,504 பேர் வீடுகளில் 95 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் விதிமுறைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இப்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை. வருகிற 10ம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்