பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல் மந்திரி வேட்பாளர் - ஜேபிநட்டா

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசு நடக்கிறது. இந்நிலையில் அதன் பதவிக்காலம் முடிவடைவதால், வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்துக்கும், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் நடந்து வருவதால் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இதனால் அதிக தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் லோக் ஜனசக்தி, கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநில பா.ஜனதாவின் செயற்குழு கூட்டம் நேற்று பாட்னாவில் நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி கூட்டத்தில் பேசிய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, கூட்டணியில் பிளவு இல்லை என்று கூறினார்.

பீகாரில் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரி வேட்பாளர். நமது கூட்டணியில் பிளவு இல்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதா, லோக் ஜனசக்தி ஆகியவை நிதிஷ்குமார் தலைமையில் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெறும் என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

மேலும் அவர், பா.ஜனதா தன்னைத்தானே பலப்படுத்திக்கொள்வதுடன், கூட்டணி கட்சிகளும் பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. பா.ஜனதாவை மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு சித்தாந்தமோ, மக்களுக்கு சேவை செய்யும் உணர்வோ இல்லை. அற்ப அரசியலை தாண்டி அவர்கள் வெளிவர முடியாது. பீகாரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் நிதிஷ்குமார் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறினார்.