வேண்டாம்... இந்த முயற்சியை கைவிடுங்கள்... தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

சென்னை: நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது என்று தினகரன் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், நடத்துனர்களே இல்லாமல் பேருந்துகளை இயக்கும் திட்டம் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முறையில் பேருந்தில் ஏறும்போதே டிக்கெட் வழங்கப்படும். இதனை தமிழகம் முழுக்க விரிவுபடுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.
சோதனை முயற்சியாக நாகப்பட்டினத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்திய முதல்நாளே சிறு விபத்து நடந்ததை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

நஷ்டத்திலிருந்து மீட்க எவ்வளவோ வழிகள் உள்ளபோது, மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ஓட்டுனர்களுக்கு மன அழுத்தத்தையும் பணிச்சுமையையும் கொடுக்கும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மேலும் போதிய ஊழியர்களோடு பேருந்துகள் இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.”. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.