கூட்டுறவு வங்கியில் எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை; முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, நேற்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.