தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழிக்க முடியாது .. உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தொழிலாளர்களுக்கும், திமுகவுக்கும் இடையேயான உறவை யாராலும் அழிக்க முடியாது .... மே 1 தொழிலாளர் தினத்தை ஒட்டி, சேலம் மாவட்டம் மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து அப்போது பேசிய அவர், “ரத்தம் சிந்தி உழைப்பவர்களை நினைவு கூரும் வகையில் மே தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் இந்நன்நாளில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவிலேயே 1923-ம் ஆண்டு முதல் மே தினம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் உயிரை மதிக்கும் இயக்கம் தி.மு.க. இந்தியாவில் முதன் முறையாக விடுப்புடன் சம்பளம், 20 சதவீதம் போனஸ் கொடுத்ததும்,

இதனை அடுத்து கூலி தொழிலாளர்களுக்கு வீடு, கை ரிக்சா ஒழிப்பு, பணிக்கொடை வழங்கல், விபத்து காப்பீட்டு திட்டம் என அனைத்தையும் தந்தது கலைஞர் அரசு. தமிழகத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 247 கோடி பண பலன்கள் வழங்கப்பட்டு உள்ளது

12 மணி நேர வேலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்திருந்தார். மே தின விழாவான இன்று அச்சட்டத்தை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் அறிவித்து உள்ளார். தி.மு.க. அரசு எப்போதும் தொழிலாளர் நலனுக்கு பாடுபடும். திமுக என்றைக்குமே தொழிலாளர்கள் நலனை பேணிக் காக்கும். தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது” என அவர் தெரிவித்தார்.