முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம் மற்றும் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

ராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECB) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரி ஆகியோர் தனிப்பட்ட முறையில் சம்மன் அனுப்பப்பட்டும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பிடிஐ தலைவர்கள் பலர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அவர்களுக்கு எதிராக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பலமுறை எச்சரித்ததையும் மீறி அவர்கள் இருவருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.