உற்பத்தியை அதிகரிக்கணும்... ஆயுத தொழிற்சாலைகளுக்கு வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு

சியோல்: ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க வடகொரியா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவின் எச்சரிக்கையையும் மீறி தென்கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்த அவர், நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் விதமாக ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்.