கல்லூரி திறப்பு குறித்து 12 ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் 9-ந்தேதி இன்று நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நவம்பர் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா என்பது பற்றி 12 ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை திறப்பது பற்றி கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.