மணிப்பூர் மாநில ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

மணிப்பூர்: ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்... மணிப்பூர் சென்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பிக்கள் குழு அம்மாநில ஆளுநரை சந்தித்து, அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

I.N.D.I.A என்ற பெயரிலான எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் அடங்கிய குழு நேற்று மணிப்பூர் சென்றடைந்தது.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்தித்த எம்.பிக்கள் குழு, அவர்களது குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் இன்று தலைநகர் இம்பாலில் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உக்கியை நேரில் சந்தித்தனர்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் உடனடியாக அறிக்கை அளிக்கும்படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.