எங்களது ஆட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடரும் - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகையை தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் கவனமுடன் ஈடுபடும்படி மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி நடந்தது. இதில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இங்கிருந்தே மகா என்பது அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளது. மகா அகாடி, மகாராஷ்டிரா இன்னும் பல. இந்த மகா டெல்லிக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறினார்.

மேலும் அவர், கடந்த ஆண்டு நான் கூறும்பொழுது, இந்த ஆண்டில் சிவசேனாவின் முதல் மந்திரி ஆட்சி செய்திடுவார் என கூறினேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்பதனை காணலாம். இந்த அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும். உண்மையில், நாங்கள் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சி செய்வோம் என்று கூறினார்.

இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலுக்கு மத்தியிலும் அங்கு மும்பை நகரில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.