இம்ரான்கான் கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டம்

இஸ்லாமாபாத்: தடை விதிக்க அரசு திட்டம்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ம் தேதி விசாரணைக்கு இம்ரான்கான் ஆஜரானபோது, துணை ராணுவப் படையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறை வெடித்தது. லாகூர் பிரிகேட் கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ கட்டிடம் உட்பட பல இராணுவ தளங்களை அவரது கட்சி நாசமாக்கியது. ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது.

வன்முறை மோதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இம்ரான் கான், ராணுவம் மற்றும் பொதுச் சொத்துகள் மீது தனது ஆதரவாளர்கள் நடத்தும் தாக்குதல்களைக் கண்டிக்க இன்னும் தயங்குவதாகக் கூறினார்.

ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியை தடை செய்ய அரசு முடிவு செய்தால், தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ராணுவத்தை தனது எதிரியாக கருதுகிறார் இம்ரான் கான். தனது முழு அரசியலும் ராணுவத்தின் ஆதரவோடு நடந்ததால், இன்று திடீரென ராணுவத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்ததாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.