சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது

ஜம்மு: சர்வதேச எல்லை வழியே ஊடுருவ முயன்று பாகிஸ்தானியர் கைது செய்யப்படுவது ஒரு வாரத்தில் 3-வது நிகழ்வு ஆகும்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் ஆர்.எஸ். புரா பகுதியில் அரீனா பிரிவில் சர்வதேச எல்லை வழியே பாகிஸ்தானியர் ஒருவர் இன்று காலை ஊடுருவ முயன்றுள்ளார். அவரை எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

ஒரு வாரத்தில் ஏற்பட்ட 3-வது ஊடுருவல் முயற்சி இதுவாகும். கடந்த 25-ந்தேதி ஜம்முவின் சம்பா பகுதியில் சர்வதேச எல்லை வழியே ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவரை பி.எஸ்.எப். படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

எனினும், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்நபர் தன்னிடம் வைத்திருந்த 8 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை விட்டு, விட்டு காயங்களுடன் தப்பியோடினார். அவரது ரத்த மாதிரிகளை படையினர் சேகரித்து வந்துள்ளனர்.
இதனால் போதை பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் கடந்த 21-ந்தேதி தபாரக் உசைன் (26) என்ற சந்தேகத்திற்குரிய நபரை ராணுவத்தினர் கைது செய்தனர். ரஜோரி மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த அவரை படையினர் நிற்கும்படி கூறினர்.

எனினும் அவர்களை கண்டதும் தப்பியோடிய அவரை சுட்டு பிடித்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் ராணுவ வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்த நபர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.