நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்... நாடாளுமன்ற தாக்குதல் 19-வது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் எட்டு பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அஃப்சல் குரு கடந்த 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

நாட்டின் மிக உயரிய பாதுகாப்பைக் கொண்ட நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டதன் 19-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி உயிர்ழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
அதை போல குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா, குலாம் நபி ஆசாத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.