கன்னியாகுமரியில் விரைவாக பரவும் கொரோனாவால் மக்கள் அச்சம்

தினமும் 100 பேர் பாதிப்பு... கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தினமும் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்கள், போலீஸார், அரசு அலுவலர்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என இதுவரை 1800 பேருக்கு மேல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் தினமும் 100 பேரில் இருந்து 180 பேர் வரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நகர, கிராம வாரியாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் மட்டும் 1100 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா அதிகமானோருக்கு பரவும் சூழல் நிலவுவதால் சளி, காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருப்பவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும், அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த பாஜக பிரமுகர் குமாரவேல் உட்பட மேலும் 3 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரனோவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.