ரஷ்ய படைகள் தாக்குதலால் மின் உற்பத்தி பாதித்து மக்கள் அவதி

உக்ரைன்: கீவ் நகர மக்கள் பாதிப்பு... கீவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கீவ், கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கரமான தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது நேற்று முன் தினம் ரஷிய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அங்கு மிகப்பெரிய அளவில் தீப்பற்றியது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கீவ் நகர கவர்னர் ஒலெக்சி குலேபா தெரிவித்தார். மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியதுடன் மின் உற்பத்தி பாதிப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.