கொரட்டூர் பகுதியில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள்: நள்ளிரவில் சாலைகளில் தஞ்சம்

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று மதுரவாயல், கொரட்டூர் உட்பட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

சென்னையின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முக்கியமாக மதுரவாயல், கொரட்டூர் உட்பட பல பகுதிகளில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அவசர, அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். மேலும் உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் எழுப்பி அழைத்து வந்தனர்.

முக்கியமாக கொரட்டூரில் தமிழ்நாடு குடியிருப்பு வாரியத்தால் கட்டி விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து அவசர, அவசரமாக வெளியேறினர். 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்காமல் விழித்திருந்தவர்கள் மற்றவர்களை எழுப்பி எச்சரிக்கைபடுத்தி வீடுகளை விட்டு வெளியேற்றினர். மேலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் சாலைகளிலேயே வெகுநேரம் நின்றிருந்தனர்.


இதுகுறித்து டாக்டர் ஷர்மிளா கூறுகையில், நள்ளிரவு 1 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் ஆடியதால் அச்சம் ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் தூங்காமல் இருந்தவர்கள் மற்றவர்களை எழுப்பினர். மீண்டும் வீட்டுக்கு உள்ளே செல்வதற்கு அச்சமாக இருந்தது. இதுபோன்று நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை மக்களுக்கு அரசு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஏதுவாகும் என்றார்.

இதேபோல் சேகர் என்பவர் கூறுகையில், சிறிய அளவிலான நிலநடுக்கம் என்பதால் எவ்வித பிரச்னையும் இல்லை. இருப்பினும் நள்ளிரவு 1 மணி என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மக்களின் அச்சத்தை போக்க இதுபோன்று நிலநடுக்கம் ஏற்படலாம் என்பதை அரசு முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் பொதுமக்கள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் சாலையிலேயே தங்களின் குழந்தைகளுடன் வெகுநேரம் நின்றிருந்தனர்.