கைதான 3 பேரையும் 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி

3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி... இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரண விவகாரத்தில் கைதான அவனது காதலி உள்ளிட்ட 3 பேரை 3 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் தேடப்பட்ட அங்கொட லொக்கா, கோவையில் பிரதீப் சிங் என்ற பெயரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தநிலையில் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தான்.

இதுதொடர்பாக அங்கொட லொக்காவின் காதலியான இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி, பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனு, கோவையிலுள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 3 பேரையும் 5 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோரப்பட்டது. ஆனால் நீதிபதி 3 நாள்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.