ஊரடங்கு பகுதியில் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் திறக்க அனுமதி

வர்த்தகம், மருந்தகங்கள் திறக்க அனுமதி... கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

அதற்கமைய இன்று காலை முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி வீதி மற்றும் நீர்கொழும்பு வீதிகளில் பயணிக்குபோது கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.