முழு ஊரடங்கு நிறைவடைந்த 3 மாவட்டங்களில் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் அமலில் இருந்த முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தளர்வுகள் விவரம் வருமாறு:-

கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் திறக்கப்படலாம்.

அனைத்து வகையான தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம். ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம். அதில், குறைந்தபட்சம் 20 சதவீதத்தினர் வீடுகளில் இருந்து பணிகளை பார்க்கலாம். தனியார் நிறுவனங்கள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம்.

வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் ஏ.சி. இயக்காமல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 5 வாடிக்கையாளரே ஒரு நேரத்தில் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

டீ கடைகள், ரெஸ்டாரண்டுகள் மொத்த இருக்கையில் 50 சதவீத இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் செயல்படலாம். மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள், முட்டை கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.

வாடகை கார்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.