நியூஸ் கிளிக் நிறுவனம் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல்

புதுடெல்லி: மனுதாக்கல்... இந்தியாவுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதற்காக சீன நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதாக நியூஸ்க்ளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியரும் நிறுவனருமான பிரபீர் புர்கயஸ்தா மற்றும் மனித வளத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நியூஸ்க்ளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, சீன நிறுவனங்களின் உதவியுடன் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சர்ச்சைக்குரிய பகுதிகள் என செய்தி வெளியிடும் சதியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான மின்னஞ்சல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை லாபியின் தீவிர உறுப்பினரான நெவிலி ராய் சிங்கமும், சீனாவில் உள்ள அவரது ஸ்டார் ஸ்ட்ரீம் நிறுவனத்தின் ஊழியர்களும் அனுப்பியுள்ளனர். இவ்வாறு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பிரபீர் புர்கயாஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், நியூஸ் கிளிக் நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நியூஸ்க்ளிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

இதை நீதிபதி துஷார் ராவ் ஏற்றுக்கொண்டார். புர்கயஸ்தா, சக்ரவர்த்தி ஆகியோரின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை விடுவிக்கக் கோரியிருப்பது குறித்து வரும் 9-ம் தேதி பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.