மத்திய அரசுடன் பைசர் நிறுவனம் பேச்சு நடத்த உள்ளதாக தகவல்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தடுப்பதற்கு அமெரிக்காவின் பைசர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியை உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்தில் பயன்படுத்த அங்குள்ள அரசு ஒப்பதலை வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்பு வசதிகள் குறித்து மத்திய அரசுடன் பைசர் நிறுவனம் பேச்சு நடத்த இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், இப்போது நாங்கள் உலகமெங்கும் உள்ள பல அரசுகளுடன் பேசி வருகிறோம். இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்நிறுவனம், இந்த பெருந்தொற்று காலத்தில் பைசர் தனது தடுப்பூசியை அரசு ஒப்பந்தங்கள் மற்றும் ஒழுங்குமுறை அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே வழங்கும் என தெரிவித்துள்ளது.