பைசர் நிறுவனம் தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் வழங்கி வினியோகிக்க திட்டம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக அமெரிக்கா இன்றளவும் தொடர்கிறது.தடுப்பூசி வருவது எப்போது என்பதுதான் அங்கு மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னணி மருந்து நிறுவனமான பைசர் நிறுவனம், தனது தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் வழங்கி வினியோகிப்பதற்கான மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.ரோட் தீவு, டெக்சாஸ், நியு மெக்சிகோ, டென்னிசி ஆகியவைதான் அந்த 4 மாகாணங்கள் ஆகும்.

இதுகுறித்து பைசர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தொடர்புடைய அமெரிக்க அமைப்புகளுடன் எங்கள் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இது, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான திட்டமிடல், வரிசைப்படுத்துதல், நிர்வாகம் ஆகியவற்றுக்கு உதவும் என தெரிவித்துள்ளது.

இந்த 4 மாகாணங்கள் மூலம் கிடைக்கிற அனுபவத்தை கொண்டு, அமெரிக்கா முழுவதும் இந்த கற்றல் திட்டம் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும் பைசர் நிறுவனம் கூறி இருக்கிறது. அமெரிக்காவில் தேர்தலுக்கு பின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.