பிரிட்டனை சேர்ந்த அஸ்ட்ரா செனேக்காவின் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையை அடைந்துள்ளன. இதனால் அவை விரைவில் தயாராகி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என பலரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ரா செனேக்கா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுடன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு உடன்பாடு செய்துள்ளது. மேலும் இந்த கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்ட்ரா செனேக்கா நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும். இந்த தடுப்பூசியின் விலை ஐரோப்பிய நாடுகளை விட குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.