பிளஸ்-2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவிகள் 94.8 சதவீத பேரும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவியர் மாணவர்களை விட 5.39 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்-2 தேர்வில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது.

இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்த தகவலை அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதன்படி பிளஸ்-2 மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24ம் தேதி முதல் 30 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205ம் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்க வேண்டும்.

மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள் முகக்கவசமும், கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளி, கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.