தமிழக முதல்வர் உட்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காலை ஆலோசனை

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 மாநில முதல்வர்களுடன் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 மாநில முதல்வர்களுடன் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.